கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
மாகாண சபைகளின் பொதுச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண மற்றும் பிரதேச சுகாதார இயக்குநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அடங்கிய குழு, அந்தந்த மாகாணங்களிலிருந்து கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களது சடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தைத் தீர்மானிக்கும் வரை இந்த முடிவு தற்காலிகமாக இருக்கும் என்றும் அவர் ஊடகங்களுக்குக் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டு, அதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடக்கம் செய்வதற்கான அனைத்துச் செலவுகளும் அரசால் ஏற்கப்படும் என்றும், சடலங்கள் கொழும்பு மற்றும் வெலிக்கந்த மருத்துவமனை போன்ற இரு இடங்களிலிருந்து இரணைதீவுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
கொரோனாவால் உயிரிழந்த ஒருவருக்கு இரண்டு உறவினர்கள் இறுதிச் சடங்குகளுக்கு இரணைதீவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இறுதிச் சடங்குகள் சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி அல்லது பொதுச்சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி